கவிதைச் சந்நதம் 18 / நா.வே.அருள்

கடவுளுடன் உரையாடல்

கவிதை - குமரன் விஜி

 

கவிஞன் தன் மனதுக்குள் விசாரணை நடத்திக் கொண்டேயிருக்கிறான்.  அது சுயவிசாரணை.  அது ஒரு சம்பிரதாயமான சுய பரிசீலனை அல்ல.  உள்ளத்தை ஊடுருவி அதிலிருந்து கழிவு கசடுகளையெல்லாம் தூர் வாரும் துர்லபமான – தூய – பரிசீலனை. 

 

அவனது விசாரணை மனதின் புலன் விசாரணை. மன மயக்கங்களுடன் விளையாடும் ஒரு வித மழலையின் உன்னதமான விளையாட்டு விசாரணை.  அது கூட இருப்பவர்களுக்கெல்லாம் கொடுக்கிற கூட்டாஞ்சோறு மாதிரி!

 

பூனையின் கடவுள் பூனையாய்த்தான் இருக்குமென்று என் நட்புக் கவிஞன் கோசின்ரா எழுதுவான்.  குமரன் விஜியும் கடவுளை வைத்து ஒரு விளையாட்டு நிகழ்த்துகிறான்.  கடவுளை நண்பனாக்கிவிடுவது ரொம்பவும் சௌகரியம்.  இவன் தனக்கென ஒரு கடவுளை சிருஷ்டித்துக் கொள்கிறான்.  அவனவனுக்கு ஏற்றபடி ஒரு பொம்மைதானே கடவுள்?  கடவுளைப் படைப்பது மார்க்ஸ் பெருமூச்சு விடும் மகத்தான கலை அல்லவா?

 

நட்பு பாதி காதல் பாதி கலந்த தட்ப வெப்ப நிலையில் ஒரு கடவுளையே செய்துவிடுகிறான் கவிஞன். அவனவன் தேவைக்கு அவனவன் ஒரு கடவுளை வைத்திருப்பதை அநாயசமாக ஒற்றை வரியில் ஒரு கவிதை மின்னலைக் காட்டிவிடுகிறான்.  நமக்குள் இடி இடிக்கிறது.  மழை பொழிகிறது.  தொப்பைக் கட்டையாய் நனைந்தும் போகிறோம். 

 

இவன் கடவுளை யாரிடமும் பிச்சையாய்க் கேட்பதில்லையாம்.   இன்னொரு விஷயம்.  கடவுளைப் பிச்சை கேட்பது இயலாமை.  ஆனால் கடவுளையே பிச்சை போடுவதற்குக் கிளம்பியிருக்கிறது ஒரு திருக்கூட்டம்.  அதைவிடப் பாசாங்குத்தனமானதும், சிறுபிள்ளைத்தனமானதும், உள்நோக்கம் கொண்டதும், அதிக பட்சமான அயோக்கியத் தனமும் வேறு என்ன இருக்க முடியும்?  ஒரு இரண்டு வயதுக் குழந்தையைக் கூட்டிச் சென்று ஒரு வழிபடும் தலத்துக்கு முன் நின்று கன்னத்தில் போட்டுக் கொள்ளச் சொல்லிக் கற்றுக் கொடுப்பது கடவுளைப் பிச்சை போடுவதுதானே?  அதுவும் கேட்காமல் உட்கார்ந்திருக்கும் ஒருவனின் கையில் பத்து ரூபாய் நோட்டைத் திணித்துப் புதிய பிச்சைக்காரனை உருவாக்குவது மாதிரியானதுதான்.  நாம் ஒரு முறை கூடக் கடவுளை நேரில் காணாமல் ஒருவனின் இதயத்திற்குள் கடவுளை ஒரு பிச்சைப் பொருளாகத் திணித்து வைக்கிறோம். 

 

அப்படியென்றால் இந்தக் கவிஞன் காட்டுகிற கடவுளும் அப்படித்தானா?  இல்லை.  இல்லவே இல்லை.  நாமும் குழந்தைகள் அல்ல.  அவரும் நமக்கு அவர் கடவுளைப் பிச்சை போடவில்லை. 

 

மணல்வீடு கட்டி அலை அழிப்பதைப் பார்த்துக் கடற்கரையை விட்டு வெளியேறி வெகுநாட்களான நம்மிடம் ஓர் உரையாடலைத் தொடங்குகிறான். அதுவும் அவனது கடவுளை நம்மேல் திணிக்கவில்லை.  அவனுடைய கடவுளுடன் அவன் நடத்திய உரையாடலை நம் கண்முன் நிகழ்த்துகிறான்.  அவ்வளவுதான். 

 

அவ்வளவு நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட உரையாடல் இல்லைதான்.  அவர் மனதுக்குப் பட்ட ஒரு உரையாடல்.  ஆனால் இந்த உரையாடலே போதுமானது…. நம் மனதில் இருக்கிற பழைய ஓவியங்கள் கிழிந்து நார் நாராகத் தொங்குகின்றன.  அப்படி இந்தக் கவிஞன் என்னதான் உரையாடல் நிகழ்த்திவிட்டான்?.... இதோ….

"கடவுளே

உனக்கு யார் கடவுள்"

"அப்படி யாருமில்லை

அப்படியொரு நம்பிக்கையுமில்லை"

என்றது கடவுள்

"சரி கடவுளே இன்னொரு கேள்வி"

"கேள் "

கேட்டேன்

நண்பர்களின் கடவுள்கள்

கோவாக்சின்

போட்டு காப்பாற்றுமா

போடாமல் காப்பாற்றுமா

"அட போடா கிறுக்கா"

நண்பர்களின் கடவுள்கள்

பூட்டுபோடப்பட்டு மீண்டும் லாக் டவுனில் இருக்கிறார்கள்.

 

இனி முழுக் கவிதை -

 

நான் அடிக்கடி

கடவுளோடு பேசுவதுண்டு

நானே உருவாக்கி கொள்ளும்

கடவுளெனக்கு

நல்ல பழக்கம்

நிறைய பேசுவோம்

நான்

என் கடவுளை

நட்பு பாதி காதல் பாதி

கலந்த தட்வெட்ப வானிலையில் செய்திருக்கிறேன்

யாரிடமும்

கடவுளை பிச்சையாய் கேட்பதில்லை

அவனவன்

அவனவன் தேவைக்கு வைத்திருக்கிறான் கடவுள்

கையால் ஆகாதவன்தான்

மற்றவனிடம்

கடவுளை பிச்சை கேட்கிறான்

ஒரு நாள் இரவு

எப்போதும்போல் பேசிக்கொண்டிருந்தோம்

அன்று இப்படி கேட்டேன்

"கடவுளே

உனக்கு யார் கடவுள்"

"அப்படி யாருமில்லை

அப்படியொரு நம்பிக்கையுமில்லை"

என்றது கடவுள்

"சரி கடவுளே இன்னொரு கேள்வி"

"கேள் "

கேட்டேன்

நண்பர்களின் கடவுள்கள்

கோவாக்சின்

போட்டு காப்பாற்றுமா

போடாமல் காப்பாற்றுமா

"அட போடா கிறுக்கா"

நண்பர்களின் கடவுள்கள்

பூட்டுபோடப்பட்டுமீண்டும் லாக்டவுனில் இருக்கிறார்கள்.

      --குமரன்விஜி

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகம்