கலையும் சமூகமும் பிரிக்க முடியாததா?
****************************************************************                     

கலை என்பது என்ன என்கிற கேள்வி காலகாலமாகக் கேட்கப்படுகிற கேள்வி.
“ஒரு மனிதன் உள்ளுறைபவனை மற்றொரு மனிதனின் உள்ளத்துக்குக் காட்டுவதுதான் கலை.  அது ஒருவனின் உண்மையான பரிச்சயத்தை மற்றவனுக்குக் கொடுக்கிறது.  ஒருவனின் மௌனச் செய்தியை மற்றவனுக்குத் தெரிவிக்கிறது.  ஒருவனுடைய சுய துக்கங்களின் அனுபவத்தை இன்னொருவன் பெறும்படி செய்கிறது.  ஒருவனுக்குரிய செல்வத்தை மற்றவனும் அனுபவிக்க உதவுகிறது…. கலைஞன் ஒரு ரசிகனைக் கற்பனையிலாவது சிருஷ்டித்துக் கொண்டுதான் கலைப்படைப்பில் ஈடுபட முடியும்.  ஆகவே கலைப் படைப்பு உருவாவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும்.  உருவான பின் எல்லா மக்களுமே அந்தப் படைப்புக்கு உரியவர்களாகி விடுகிறார்கள்.  கலைஞன் ஒரு பக்கம், ரசிகர்கள் மற்றொரு பக்கம்.  ரசிகர்களெல்லாருமே கலைஞனுக்கு அந்தரங்கமானவர்கள்.  கலைஞன் எல்லோரையும் தனக்கு அந்தரங்கமாக்கிக் கொள்ள உதவும் சாதனம்தான் கலை.” 1

கலை அனுபவம் என்பது வெறும் அந்தராத்மாவில் தோன்றுவதா?  அல்லது நாம் நல்லது கெட்டது அனுபவித்து வாழ்கிற இந்த சமூகத்தில் நமக்கு ஏற்படுகிற அனுபவங்களிலிருந்து தோன்றுவதா? இலக்கியம் என்பதும் அப்படித்தானா?  உலகியல் நடப்பு எதுவுமே இல்லாமல் அந்தரத்து விஷயங்களா எழுத்துகள்?  ஒருவன் தன்னையே தருகிறான் என்பதும் அதையே மற்றவன் பெறுகிறான் என்பதும் நமக்கு உணர்த்துவது என்ன?  இருவருக்கும் பொதுமையான உணர்ச்சி இருந்தாலன்றி இந்த ரசவாதம் நடக்குமா?  எப்போதோ எழுதிய இராமாயணமும், மகாபாரதமும் இன்றளவும் ஏன் மானுட வாழ்வின் நாடித் துடிப்பினைப் பிரதிபலிக்கிறது? மானுட வாழ்வில் ஒவ்வொருவரின் அனுபவமும் தனிப்பட்டதாக இருக்கிற அதே வேளையில் பொதுமையாக இருப்பதாலும்தானே?

“ஓரிரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் எஞ்சியிருப்பது கலை ஒன்றுதான்.  கலைதான் நம் நாகரிகத்தின் சிறப்பு.  இருபதாம் நூற்றாண்டின் சமூக
                                     //2//
அமைப்பையோ அல்லது அதன் நிலைகுலைவுகளையோ பற்றி முப்பதாம் நூற்றாண்டின் மக்களுக்கு எவ்வித அக்கறையும் இருக்காது.  ஆனால் இக்காலத்தின் ஓவியக் கலையிலோ இலக்கியத்திலோ சிறந்த படைப்பு ஏதாவது இருக்குமானால் அவர்கள் நிச்சயம் ஒரு சில கணங்களாவது அவற்றின் பக்கம் திரும்பிப் பார்ப்பார்கள்.  கலாச்சாரத்தின் உரைகல் அதுதான்.” 2

கலை இலக்கியம் என்பது சமூகத்தில் வேரூன்றியிருப்பது என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.  ஆனால் அந்த வேரூன்றல் என்பது கலை இலக்கியமாக இருக்கிறதா என்பது முக்கியம்.  இது ஒன்றும் அரசியல் அறிக்கை அல்ல. எப்படி கலை இலக்கியம் என்பது ஒரு துறையோ அப்படியே அரசியல் என்பது ஒரு துறை.  அரசியல் அறிக்கையின் தேவையை கலை இலக்கியத்தால் பூர்த்தி செய்ய முடியாது.  ஆனால் அரசியல் அறிக்கையை எழுதுவது ஒரு கலை இலக்கியவாதியாய் இருக்கும் பட்சத்தில், அல்லது அவரது கலை இலக்கியத்தின் தீராத முனைப்பின் காரணமாக அரசியல் அறிக்கை கலை இலக்கிய அறிக்கைபோல இருந்தால் அது படைத்தவனின் வெற்றி எனலாம்.  கார்ல் மார்க்ஸும் எங்கெல்ஸும் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையில் இலக்கியத்தின் சாயலைப் பார்ப்பதாக அநேகர் கருதுகின்றனர். 
அதனால் அரசியல் துறையை முற்றும் முழுதுமாக கலை இலக்கியத் துறை தனது வேலையாக ஏற்பதில் சிக்கல் இருக்கிறது.  ஆனால் கலை இலக்கியத் துறை என்பது அரசியல் துறையை மட்டுமல்ல, வேறு எந்தத் துறையையும் பிரதிபலிக்கும் என்பதில் ஐயமில்லை. 

“கலையின் இலட்சியம் தன் சொந்தப் பொறுப்பை நிறைவேற்றிக்கொண்டு வாழ்க்கையின் ஒரு சில துறைகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதும் வாழ்க்கையின் முழுமையில் இணைந்து செல்வதுந்தான்.  கலைஞனால் எல்லாவற்றையும் பார்க்க முடியாமலிருக்கலாம்.  எல்லாவற்றையும் ருசித்து அனுபவிக்க முடியாமலிருக்கலாம்.  அவனுக்கு முழுமை பற்றிய சுமாரான உணர்வு இருந்தால் போதும்.  உதாரணம் – ஷேக்ஸ்பியர், கெத்தே, டால்ஸ்டாய்.” 3

                                   //3//
எந்ததெந்த நிகழ்வுகள் கலை இலக்கியமாகும் என்று தெளிவான வரையறை சொல்ல முடியாவிட்டாலும் சமூகத்தின் பல நிகழ்வுகள் கலைஞனிடம் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.  அது கலையாக வெளிப்படுகிறதா என்பதுதான் முக்கியம்.

சமீபத்தில் நடந்த ஓர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினைப் ஒப்பிட்டு கலை இலக்கியப் பிரதிபலிப்பு தொடர்பாக ஒரு வரையறைக்கு வரலாம். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட செய்திக்கு நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.  ஒரு கலைஞன் நமக்கு என்ன என்று நீரோவாக பிடில் வாசித்துக் கொண்டிருக்க முடியாது.  பத்திரிகையாளர்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்டிருப்பதை அன்றாடம் நடக்கிற வீதி விபத்திலொன்று என்று நினைத்துவிட முடியாது.  இணைத்தில் கண்டெடுத்த அடுக்கடுக்கான சில செய்திகளைப் பார்க்கலாம்.

ஷகித் கான் என்கிற பத்திரிகையாளர் காவலர்களின் லத்தியடியால் காயம் சுமந்த முதுகினைக் காட்டுவதை டெலிகிராப் இணைய இதழில் பார்க்க முடிந்தது.  ஒரு தேசிய நாளிதழின் பெண் பத்திரிகையாளர் லத்திகள் சுமந்த காவலர்களால் ஸ்ரீநகர் நகரத்தின் இதயப் பகுதியில் மிரட்டப்பட்டு வசை மொழிக்குள்ளானார் என்கிற செய்தி மனசை சஞ்சலப்படுத்துகிறது.  தி டிரிப்யூன் தினசரியின் சண்டிகர் செய்தியாளர் ரிஃபாட் மொஹிதின் என்கிற பெண்  சென்ற கார் பல மணித்துளிகள்  அரை டஜன் காவலர்களின் லத்திகளால்  தொடர்ந்து தாக்கப்பட்டிருக்கிறது.  அவர் டெலிகிராப் தினசரிக்குச் சொன்னது – “நான் இதற்குமுன் இப்படிப்பட்ட வசைச் சொற்களை யாரிடமிருந்தும் இப்படிக் கேட்டதேயில்லை.  ஜன்னல் தவிர காரின் மற்ற அனைத்துப் பகுதியிலும் லத்தியால் தாக்கினார்கள்.  நான் கதறினேன்.  ஆனால் ஒருவரும் உதவிக்கு வரவில்லை.  ஏற்கெனவே நான் பத்திரிகைத் துறையில் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று என் குடும்பத்தை நம்பவைத்துப் பணிக்குச் செல்வதற்குப் படாத பாடு பட்டிருக்கிறேன்.  இன்று நடந்த இந்த நரகவேதனை அனுபவத்தைச் சொன்னால் என்னைப் பத்திரிகையாளராகத் தொடர விடவே மாட்டார்கள்.  தூரத்தில் இருந்து பார்த்து இதைக் கொடுமை என்று சொல்கிறவர்கள் யாரும் அருகில் வரத் துணியவில்லை”
                                  //4//
இப்படியான அச்சுறுத்தல்களையும் தகாத நடவடிக்கைகளையும் அரசு எந்திரம் கைவிட வேண்டும்.  நிறைய பத்திரிகையாளர்கள் புகார்கள் அளித்துள்ளனர்.  முஹரம் ஊர்வலத்தின் போது ஆண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது பத்திரியாளர் சங்கம்.  இவர்கள் வெறும் பத்திரிகையாளர்கள் என்று ஒதுக்கிவிட முடியுமா? எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையா?

“ஆரம்பகால எழுத்தாளருக்கு செய்தித்தாள் அலுவல் ஒரு பயனுள்ள அனுபவம் என்று நான் நம்புகிறேன்.  இலக்கியத்திலேயே வெறெதனாலும் ஈடுகட்ட முடியாத ஒரு பயிற்சியாக அது அமைகிறது.  செய்தித்தாள் வேலை எந்தவிதமான பயிற்சியை அளிக்கிறது?  சுருங்கச் சொல்லல், தெளிவான வெளிப்பாடு, தெறிவான சிந்தனை போன்ற இலக்கிய பூர்வமான உரைநடைக்கு இன்றியமையாத சிறப்பு நிறைந்த அம்சங்களை அது வளர்க்கிறது.” 4

இப்படிப்பட்ட நிகழ்வுகளின் எதிர்வினையாக ஒரு பதிவினைப் பார்க்க முடிந்தது.  “நன்மக்களே ஆள்வோர் ஆட்சியை வைத்து பஜனை பாடட்டும்.  மக்களே நீங்கள் சாமி பேரச் சொல்லி பஜனை பாடுங்கள்.  நடப்பதெல்லாம் நன்மைக்கே நாம் எதைக் கொண்டு வந்தோம் எதைக் கொண்டு போகப் போகிறோம்? நாட்டில் உள்ளவற்றை எடுத்துப்போக மேலே உள்ளவர்கள் இருக்கின்றார்களே.  வந்தே மாதரம், ஜெய் ஹிந்த், அரோகரா, ஸ்ரீராம் ஜெய்ராம். நமசிவாய, கோவிந்தா கோவிந்தா என்ற எழுத்தாளர் கனக சுந்தரம் அவர்களின் ஒரு பதிவினையும் பார்க்க முடிந்தது.”  இவர் பத்திரிகையாளர் மட்டுமல்ல.  ஒரு நாவலாசிரியரும் கூட.  இப்படிப்பட்ட நிகழ்வுகள் பத்திரிகையாளர்களுக்கே இந்த கதி என்றால், எழுத்தாளர்களுக்கு என்ன கதி என்று யோசிக்க வைக்கிறது.

“கலையின் லட்சியம் எதுவாக இருக்க வேண்டும்?  கூடிய வரையில் மிகக் குறைந்த தளைகளும் தடைகளும் உள்ள, மிகவும் விரிவான மலர்ச்சி பெற்ற வாழ்க்கையே கலையின் லட்சியம்.  ஏராளமான களைகளுக்குட்பட்ட சூழ்நிலையில் கலை சுதந்திரமாகச் செயற்பட முடியாமல் தவிக்கும்.  சூழ்நிலை எவ்வளவுக்கெவ்வளவு சுதந்திரமாக, தளையற்றதாக இருக்கிறதோ

                               //5//
அவ்வளவுக்கவ்வளவு கலையும் தடையின்றிச் செயற்படும்.  ஆகவே, விரிவடைந்த சூழ்நிலையே கலையின் வளர்ச்சிக்குத் தேவை.” 5


பயன்பட்ட நூல்கள்
1, “கலை” அன்னதா சங்கர் ராய்
2, “கலை”  அன்னதா சங்கர் ராய்
3, “கலை”  அன்னதா சங்கர் ராய்
4, “கலையும் மொழியும்” கான்ஸ்டான்டின் ஃபெடின்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்