இது நம்ம பூமி 

அம்பேத்கர் அண்ணலுக்கு - சாதி 
     அநியாயம் நடந்த கதை 
கண்ணீரே வத்தி வத்தி - வடிஞ்சிக் 
     காணாமல் போன கதை 

வெளையாட்டுப் பருவத்துல - அவர் 
     வெளியூரு போகையில
துளியூண்டு தண்ணி தர்ல  - கட்டு 
     சோறு தின்ன வழியுமில்ல 

ஒழக்குத் தண்ணீரை - அட 
     ஒசந்த சாதி கொடுக்கவில்ல 
கிழக்குச் சூரியனை - சிறு 
     கெணறு கூட ஏற்கவில்ல 

பள்ளியில சமமாக - மத்த 
     பிள்ளையோட குந்தினாக்கா 
பிள்ளையெல்லாம் தீட்டாச்சாம் - தனியா 
     பிரிச்சாங்க நோய் கணக்கா 

தனிசாக்கில் குந்தவச்சி  - அழுக்குத் 
     தனி டம்ளர் ஒதுக்கிவச்சி 
அனிச்சமலர் அண்ணலையே - எரி 
     அக்கினியில் போட்டாங்க 

வழக்கறிஞர் ஆனபின்னும்  - குந்தின 
     வண்டிகூட தீட்டச்சாம் 
அழுக்கு வண்டிக்காரன் - உயர்சாதி  
     அம்மணமும்  கோட்டாச்சாம் 

அண்ணலுக்கு நேர்ந்துப்புட்ட - அந்த 
     அவமானம் பாத்தீங்களா 
சொன்னகதை கேட்டீங்களா - நெஞ்சில் 
     சூடு கொஞ்சம் போட்டீங்களா 

திருடன் போல் துரத்திப்புட்ட  - கெட்ட 
     தேசமிப்போ மண்டியிடும் 
தெருத்தெருவா செலை வச்சி  - செய்ஞ்ச 
      தீம்புக்குத் தெண்டனிடும் 

'பாப்பார்'னு மேலவச்சி - பல 
     மட்டத்துல சாதிவச்சி 
'பறையன்'னு கீழவச்சி - மனுச 
     பரம்பரைக்குத் தீயைவச்சான் 

கூண்டுக்குள்ள போட்டுவச்சான் - வர்ண 
     பூட்டு போட்டு பூட்டிவச்சான் 
ஆண்டவனை சாட்சிவச்சி - நம்ம 
     அறிவுக்குள்ள தீட்டு வச்சான் 

அடிமனசில் தீயிருக்கு - உள்ளுக்குள் 
     ஆறாத ரணமிருக்கு 
வடியாத கோபத்தீ  - நம்ம 
     வயித்துக்குள்ள குடியிருக்கு 

ஆட்டுக்கா மாட்டுக்கா -  ஆத்தா 
     அப்பனுக்குப் பொறந்தமடா 
தீட்டுடைக்க பூட்டுடைக்க  - நல்ல 
     கூட்டோட போவமடா 

மண்ணைப் பெத்த பிள்ளைங்கடா - நாம 
     மரப்பாச்சிப் பொம்மை இல்ல 
எந்திருச்சி நின்னாக்கா - நாம 
     இழக்க ஒரு பூமியில்ல !....

                        --நா.வே.அருள் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்