அண்டனூர் சுராவின் \\கொங்கை\\




அண்டனூர் சுராவின்
கொங்கை
குறுநாவலை முன்வைத்து
****************************************

“,,,,,,
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த் துளிகளாய்த் தேங்கித்
தளும்புகின்றன.”

குட்டி ரேவதி ‘முலைகள்’ என்கிற தனது தொகுப்பில் இடம்பெறும் கவிதை வரிகளுடன் தொடங்கலாம்.  ஒரு நிறைவேறாத காதலில் என்கிற வரியை வேண்டுமென்றே நீக்கிவிட்டேன்.  மேலே இடம்பெற்ற இந்த மூன்று வரிகளின் வலி மிகுந்த விரிவாக்கம்தான் அண்டனூர் சுராவின் ‘கொங்கை’ என்கிற இந்தக் குறுநாவல்.

பெண்கள் ஆண்களைப் பற்றிய காமச் சிந்தனைகள் சம்மந்தமான விஷயங்கள் பரந்த அளவில் தெரியப்படாத தமிழ்ச் சமூகத்தில் ஆண்கள் பெண்கள் பற்றிய சிந்தனைகளில் முலைகள் எந்த அளவுக்கு ஆக்கிரமித்திருக்கிறதென்பதை அப்பட்டமாகப் பதிவு செய்துள்ளார் அண்டனூர் சுரா. ஆண்களின் மூளை முழுவதும் முலைகளாகத் தொங்குகின்றன. ஆண்களை மட்டுமல்ல, பெண்களும் சகப் பெண்களின் முலைகள் பற்றிய அங்கலாய்ப்புகளிலும், ஆவலாதிகளிலும் அளவுக்கதிமாகவே ஈடுபடுகின்றனர். இதைச் சர்வே பண்ணித்தான் பெண்களின் உள்ளாடை விளம்பரக் கம்பெனிகள் தங்கள் கார்ப்பரேட் கைகளை அகல விரித்திருக்கின்றன. வியாபாரச் சூத்திரங்களின் மூலம் விரித்த வலைகளில் மானுட இனம் மல்லாந்து விழுகிறது. 

சந்திரா டீச்சர், மாணவி விமலா,  சந்திரா டீச்சரின் மகள் சுஜி ஆகியோரின் உரையாடல்கள் மூலம் பயணமாகிற நாவல், பல விஷயங்களைத் தொட்டுச்செல்கிறது. தொலைக்காட்சியில் ஒரு விளம்பரக் கம்பெனியின் உள்ளாடை விளம்பரத்திலிருந்து தொடங்குகிற நாவல் தனது மார்பகங்களைச் சிறுசாக்க வழியுண்டா என்று தன் டீச்சருடன் மார்பக அழகு நிலையத்திற்குள் நுழைவது வரை நகர்கிறது. இப்படியான மார்பகத்தைக் குறைப்பதா, ஒன்று செய்ய முடியுமா, நீ பயன்படுத்தும் பிராவின் பிராண்டாக எங்களின் பிராண்டாக ஒரு பொய் சொல்லமுடியுமா, நிறைய பணம் கிடைக்கும் என்று பேரம் பேசுகிறார்கள்.

மார்பகத்தில் பால் கசிகிற காரணத்தை அறிகிறபோது அரண்டு போகிறோம்.  இப்படியான தனியார் பால் பண்ணைகள் இருக்கின்றனவா?  இந்தப் பசுக்களுக்கு மனிதர்கள் செய்கிற கொடுமை எந்த வதையில் சேர்த்தி. இந்தக் கார்ப்பரேட்தனங்களுக்குப் பசு குண்டர்களின் பதில் என்னவாய் இருக்குமாம் என்கிற கேள்விகளை எழுப்புகின்றன.  சுஜி ஒரு பகுத்தறிவுப் பெண்ணாக நடந்து கொள்கிறாள்.  சந்திரா டீச்சரின் ஆணாதிக்க அடிபணிதலுக்குச் சுறுக் சுறுக்கெனப் பகுத்தறிவுச் சாட்டைகளைச் சொடுக்குகிறாள்.  விஜி எல்லா விளம்பரங்களுக்கும், சீரியல்களுக்கும் பலியாகிப்போன சராசரிப் பெண்ணாக இருப்பதில் திருப்தியுறுகிறாள்.

சந்திரா டீச்சர் சைக்கிள் மிதிக்கத் தயாராய் இருந்தாலும் பின்னால் உட்கார்ந்து செல்ல அவரது கணவர் தயாராக இல்லை.  சந்திராவை பாராக்கு பார்க்க அனுமதிக்காத கணவராக வேறு இதுக்கிறார்.  மனைவியின் அத்தனை உறுப்புகளின் எடையைக் குறைக்கும் அக்கறையுள்ள கணவருக்கு ஓர் உறுப்பின் எடையைக் குறைக்கக் கூடாதென்கிற ஆதங்கம் எல்லோரிடமும் உண்டுதானோ? 

வெளிநாட்டில் வெளிப்படையாகவே குழந்தைகளுக்குப் பாலூட்டும்போது ஆண்களின் பெருந்தன்மைப் பறைசாற்றப் பட்டாலும் அவர்களுக்குப் பெண்களின் பிற உறுப்புகளின் மீதுள்ள கவர்ச்சி நாட்டுக்கு நாடு மாறுபடுவதை உணர முடிகிறது.  இந்தப் பார்வையில் பார்க்கிறபோதுதான் பொதுவாகவே இதை எதிர்ப் பாலின ஈர்ப்பாகப் புரிந்துகொண்டால் தவறென்ன என்கிற மனோபாவத்தை வாசகனிடம் ஏற்படுத்திவிடுகிற பலவீனம் இருக்கிறது. ஈர்ப்பைப் பிரச்சினையாக்குவதைவிட ஈர்ப்பின் எல்லையைப் பிரச்சினையாக்குவதுதான் முக்கியமாகப் படுகிறது.

மார்பகத்தை முன்வைத்து நிகழ்ந்த பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் காலம், இட வேறுபாடுகள் கடந்து சுவாரசியமாகவே முன்வைக்கப்படுகின்றன. 

ஜெயகாந்தன் சிறுகதைகளுக்கு ரா.ஸ்ரீ.தேசிகனின் முன்னுரை மாதிரி இந்த நாவலுக்கு கவிதா முரளிதரனின் அற்புதமான முன்னுரை அமைந்திருக்கிறது. நாவலின் பரிமாணத்தையே உயர்த்திவிடுகிறமாதிரியான குறுநாவலின் போதாமையை இட்டுக் கட்டிவிடுகிறமாதிரியான குண விசேஷங்கள் நிறைந்த முன்னுரை. 

”நம்ம ஊர்ல அழுக்குத் தேய்ச்சி ஒழுங்காக் குளிக்க முடியுறதில்லே, ரெண்டு கையில ஒரு கையை மார்பகத்தை மறைக்கிறதுக்கென்றே ஒதுக்க வேண்டியிருக்கு” என்று தன் டீச்சருடன் பேசும் ஆறாம் வகுப்பு மாணவி விமலாவால் சொல்ல முடிகிறது.  அப்படிப்பட்டவள் புதினத்தின் முடிவில் எடுக்கிற அதிர்ச்சி மிகுந்த முடிவு அவளது மனஉறுதிப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குகிறது.  அதனால்தான் கவிதா முரளிதரன் தனது முன்னுரையில் “கான்சருக்கு முலைகளைப் பறிகொடுத்திருக்கிறோம்., ஆனாலும் நாங்கள் முழுமையான பெண்கள்தான்” என்று லாரா டாட்ஸ்வார்த்தின் புகைப்படங்களில் இடம்பெற்ற பெண்களின் மனவுறுதி விமலாவுக்கு வாய்க்க வேண்டும் என்பதே எனது இந்த நேரத்து வுருப்பமாகவும் வேண்டுகோளாகவும் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் போலும்.

அண்டனூர் சுரா தன் முன்னுரையில் குறிப்பிட்ட மாதிரி கொங்கை என்பதை விடவும் முலைகள் என்பதுதான் பொருத்தமான தலைப்பு.  தலைப்பையொட்டி மிக முக்கியமான கேள்விகளை எழுப்புகிற இந்தக் குறுநாவலை பாரதிப் புத்தகாலயம் மிக நேர்த்தியாகக் கொண்டு வந்திருக்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்