பூமி
அநியாயம் நடந்த கதை
இம்மண்ணில் கண்ணீரே - வடிஞ்சி
இல்லாமல் போன கதை
வெளையாட்டு பருவத்துல - அண்ணனோட
வெளியூரு போகையிலே
துளியூண்டு தண்ணி இல்லே - கட்டு
சோறு தின்ன வழியுமில்ல
ஒழக்குத் தண்ணீரை - அங்க
ஒரு பயலும் கொடுக்கவில்ல
கிழக்குச் சூரியனை - எந்தக்
கிணறும் ஏற்கவில்ல
நாய்குடிக்கத் தண்ணீரை -ஒரு
நாலு அண்டா வச்சவனோ
தீப்பிடிச்ச நாக்கால - அவரைத்
துரத்தி அடிச்சுப்புட்டான்
குட்டையில குடிப்பதற்கு - தண்ணி
குவிஞ்ச கையில் எடுக்கையிலே
வெட்டை மிதந்து வரும் - பத்து
வெரலுக்கும் வாந்தி வரும்
பள்ளியில சமமாக - வகுப்பில்
பக்கத்துல குந்தினாக்கா
பிள்ளை எல்லாம் தீட்டாச்சாம் - அவரைப்
பிரிச்சு வச்சாங்க
தனி சாக்கில் குந்தவச்சி - ஒரு
தனி டம்ளர் ஒதுக்கிவச்சி
அனிச்சமலர் அண்ணலினை - எரி
அக்கினியில் போட்டாங்க
வழக்கறிஞர் ஆன பின்னும் - அவர்
வண்டியில போனாக்கா
அழுக்கு வண்டிக்காரன்
அங்கங்கூட தீட்டாச்சாம்
பூனை நாய்க்கெல்லாம் - ஒரு
புகலிடம் தந்தவங்க
தானைத் தலைவனுக்கு - ஒரு
தாழ்வாரம் தரலீங்க
திருடனைப்போல் ஒளிஞ்சிவாழ - அவரை
தெருதெருவா தொரத்தும் தேசம்
தெருவுக்கொரு சிலையை வச்சி - செய்ஞ்ச
தப்புக்கிப்போ தெண் டனிடும்
அண்ணலுக்கு நேர்ந்துப்புட்ட - அந்த
அவமானம் பார்த்தீங்களா
சொன்ன கதை கேட்டீங்களா - நெஞ்சில்
சூடு கொஞ்சம் போட்டீங்களா
ஊரு ஊரா நட்சத்திரம் - அது
ஒவ்வொண்ணும் கண்சிமிட்டும்
பேரு தாழ்ந்த நட்சத்திரம் - எதுவும்
பிறப்பாலே இல்லையடா
பாப்பானை மேலவச்சி - ஒசந்த
பறையனையே கீழவச்சி
தாப்பாள யாரு போட்டான் - நம்ம
தலைக்குள்ள கூறு போட்டான்
மீண்டுவர முடியாத - வர்ண
கூண்டுக்குள்ள போட்டுவச்சான்
ஆண்டவனை சாட்சிவச்சி - நம்ம
அறிவுக்குள்ள ஓட்டை வச்சான்
ஆட்டுக்கா மாட்டுக்கா - நாம
அப்பனுக்குப் பொறந்தவங்க
கூட்டு சதி செய்ஞ்சி - மனுவும்
குப்புறவே தள்ளிப்புட்டான்
அடிமனசில் தீயிருக்கு - உள்ளே
ஆறாத ரணமிருக்கு
வடியாத கோபத்தீ - நம்ம
வயித்துக்குள் குடியிருக்கு
மண்ணைப் பெத்த அன்னைங்கடா - நாம
மரப்பாச்சி பொம்மை இல்ல
எந்திரிச்சு நின்னாக்கா - வேற
எவனுக்குமே பூமி இல்ல.
--நா. வே. அருள்
******************************************************
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
சைதை கிளை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி
26.04.2013 அன்று நடத்திய நிகழ்வில் வாசித்த கவிதை.
கருத்துகள்
கருத்துரையிடுக