சிட்டுக் குருவி



நீ கொத்தி எடுத்துவந்த நெல்மணிகளில் இருந்தவை
என் கவிதைக்கான வார்த்தைகள்

எங்கு போனாய்?
ஏன் மறந்தாய்?

என் பார்வைக்கு வெறும் இலை
உனக்கோ அது படுக்கை

அடிக்கடி
உன் பஞ்சு இறகுகளில்
படுத்துக்கொள்ளும் என் பாழும் மனம்!

அஸ்திவாரம் இல்லாமல்கூட
ஆதர்ஷ் குடியிருப்பு கட்டிவிடுவோம்
ஒரு கல்லோடு ஒரு கல்லை
ஊழல் இல்லாமல் ஒட்டிவைக்க முடியவில்லை
எங்களால்
நீ கட்டிய கூட்டுக்கு
விலை குறிக்க எனில்
இந்தப் பிரபஞ்சம் கூடப் "பிசாத்து!"
அதைக் கசாக்கக் காத்திருக்கும்
"கார்ப்பரேட் " நிறுவனங்கள்

எங்களுக்கும் சம்மதமில்லை
நாணயமற்றுப் போன இந்த நவீன உலகம்

எங்கள் ஒவ் வொரு காதிலும் செல்போன் டவர்
சுற்றிவைத்து
காசு பறிக்கும்
"கார்ப்பரேட் " நிறுவனங்கள்
உங்கள் உயிர் பறிக்கும்
"ஊழல் மய விஞ்ஞானம்!"

எங்கு போனாய்?
ஏன் மறந்தாய்?

எங்கள் கழனிகளிலும் களத்துமேடுகளிலும்
கொஞ்சிக் கொஞ்சிக் கூட வந்தமர்வாய்
அருகில் வந்தால்
சீட்டிஅடித்து ஜிவ் என்று பறப்பாய்

நீ பார்ப்பதற்கு என்றே
என் வீட்டில்
ரசம் போன நிலைக்கண்ணாடி!

மனிதர்கள் மறந்துவிட்டால் என்ன
உன்னைக் காணாமல்
பிம்பங்களைப் பிழையாகக் காட்டி
உன் நினைவுகளோடு உழலும்
அந்த நிலைக்கண்ணாடி பாவம்!

கண்ணாடியின் கண்ணீர்த்துளிகளை
நெல்மணிகளாய்
கொத்தி எடுக்க நீ வருவாயா?
- நா வே அருள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்