உயிர்

உயிர்


எல்லோரும் வாழப்பிறந்தவர்கள்.  ஏன் சிலர் கொடூரமான முறையில் சாகடிக்கப்படுகிறார்கள்?  அவர்களுக்கான வாழ்வுரிமையைப் பறிக்க யார் அதிகாரம் தந்தது? சட்டம் கையாலாகாமல் தவிக்கிறபோது  கவிதை சில கேள்விகளை முன்வைக்கிறது.  முடிந்தவர்கள் பதில் சொல்லட்டும்.
அருணா ஷான்பாக் அவர்களுக்கு இப்படித்தான் என்னால் அஞ்சலி செலுத்தமுடிகிறது.  வரிசையாய் வார்த்தைகளை நிற்க வைக்கிறேன்.  நீங்களும் வாருங்கள்.  சேர்ந்து நிற்போம்....
அருணா ஷான்பாக் யார்?
கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்தவர்.  அல்திபூர் கிராமத்தில் வசித்துவந்த ராமச்சந்திரா ஷான்பாக், சீதாபாய் தம்பதிகளின் மகள்தான் இந்த அருணா ஷான்பாக்.
2015 மே 18 ஆம் நாள் மும்பையில் உள்ள கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனையில் 42 ஆண்டு பராமரிப்புச் சிகைச்சைக்குப்பிறகு இறந்துவிடுகிறார்.
தனது 25 ஆம் வயதில் ஆரம்பிக்கப்பட்ட சிகிச்சை மே பதினெட்டுடுடன் முடிந்துவிடுகிறது...ஆனால் பதிலிறுக்கமுடியாத கேள்விகள் பலப்பல...
அருணா ஷான்பாக்குக்கு என்ன நேர்ந்தது?...
1973 நவம்பர் 27 இரவு.
வழக்கம்போல அருணா ஷான்பாக்   கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனையில் செவிலியர் பணியில் ஈடுபட்டிருக்கிறார்...அதே மருத்துவமனையில் வார்டுபாயாக இருந்த சோகன்லால் பாரத் வால்மீகி என்பவன் பாலியல் வன்முறைக்கு பலியாக்குகிறான். அவர் அணிந்திருந்த செயின், மோதிரம் முதலியவற்றைத் திருடிச்செல்கிறான்.அவரது கழுத்தை நாய்ச்சங்கிலியால் இறுக்குகிறான்.  அருணா நினைவு  இழந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்படுகிறார்...அன்றிலிருந்து 42 ஆண்டுகளாக வார்டு எண் 4 அறையில் கோமாவிலேயே கிடக்கிறார்....
எந்தக்கோலத்தில்,,,?
அவரது கண்கள் திறந்த நிலையிலேயே இருக்கின்றன.  அனைத்தையும் பார்க்கிறார்.  உதடுகள் அசைகின்றன. எதையும் உணர்த்த முடியாமலும், உணர முடியாமலும்...
வறுமையின் பிடியில் இருந்த அவரது குடும்பம் அவரைப் பராமரிக்க வக்கற்றும் திக்கற்றும் இருந்தார்கள்.  அருணா பணியாற்றிய மருத்துவ மனையின் செவிலியர்களும், மருத்துவர்களும்தான் இத்தனை ஆ்ணடுகளாக மனமகிழ்ச்சியோடு சேவை புரிந்து வந்தார்கள்.
இதற்கெல்லாம் காரணமானவன் என்னானான்?,,,
நான்கே ஆண்டுகளில் விடுதலையானான்...
அசையமுடியாமலேயே இறந்துபோன அருணா ஷான்பாக்கின் நாவாக அசையுமா என் பேனா...?  என் மன இறுக்கத்தைத் தளர்த்த கவிதை மசி கசிகிறது...

உயிர்



அருணா ஷான்பாக் எழுதும்
ஆண்களுக்கான உயில் இது
வெறிகொண்ட விந்துவால் எழுத்பபட்ட விதி நான்
விசாலமாகவும் விகசிப்பாகவுமிருந்த எனது பிரபஞ்சம்
சுருங்கிச் சுருங்கி
வெறும் வார்டு எண் 4 ஆக ஆகிவிட்டது
கிங் எட்வர்டு மருத்துவமனையில்
கிழிந்துகந்தலான  ஒரு கருப்பை
சமூகச்சமையலறையில்
ஒரு கரித்துணிதானே?
கண்ணாடிச்சில்லுகளாய் நொறுங்கிப்போனது
என் கனவுலகம்
யாரின் பிறப்புறுப்புக்குப்
பிழைசெய்தேன் யான்?
கவிழ்ந்து பிரார்த்தனை செய்தபோது
கொய்யப்பட்ட சிரத்தைப்போல
எனது தவத்தின்போது
ஏன் எலும்புருவியது இச்சை நாய்
நான் அவனுக்கொரு மரண பொம்மையா?
ஒவ்வொரு பெண்ணின் தொண்டைக்குழிக்குள்ளும்
திணிக்கப்பட்டிருக்கும் ஆணின் திமிர் விரல் மீறி
வெளிவரக்கூடுமோ அவளின் விசும்பல்?
பாரத் வால்மீகி ஒரு சுயம்பு மிருகமா
அவனுக்குள்
சாரைசாரையாய் சக மிருகங்கள்...
சமூகமே ஒரு சாபக்காடா?
வடிவங்கள் மாறும்
வகை வகை மிருகங்கள்
யார் தரக்கூடும் எனது வாழ்ந்திருக்கவேண்டிய
வண்ணமயமான வாழக்கையை?
நான் அசைவற்றுப்போனதால்
அநாதையாய்க்கிடக்கும்
அண்ணாந்து ரசித்த ஆகாயம்.
குற்றவாளி தண்டனைதர
நீதி ஒரு வேட்டைநாய் ஆகிவிடுகிறது
குதறப்பட்ட நிரபராதி நான்
இருபத்தைந்து ஆண்டுகளில் இறந்துபோய்
எரியூட்டப்படாத இந்த சடலத்தோடு
எத்தனை ஆண்டுகளாய் எனது செவிலியச் சகோதரிகள்...
என்ன கைம்மாறு செய்துவிடமுடியும்
என் கதை முடிந்தது... அடுத்து
எந்த செவிலியச் ககோதரியோ?
ஏய்...பாரத் வால்மீகி
நாற்பத்திரெண்டு ஆண்டுகளாக நாறும் உன் விந்து
இது பழைய பாடையடா...
எனக்கிது விடுதலைக்கட்டில்
கவனமாய்க்கேள் என் கடைசி ஆசையை
என் பாடைக்கழியில் கட்டித்தொங்கவிட
வெட்டிக்கொடு உன்
விரைப்பேறிய ஆண்குறியை
இன்னும் உன் பசியடங்கவில்லையெனில்
பாடையைப்புணர்.
                                                           ----நா.வே.அருள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்